யூரியா தட்டுப்பாடு

யூரியா தட்டுப்பாடு பிரச்னைக்கு இயற்கை விவசாயத்தில் ஆழ்ந்த அனுபவமுள்ளவரான தஞ்சாவூர் மாவட்டம் தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன்.
ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 கிலோ மாட்டுச் சிறுநீர், 1/2 கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து மூடிவைத்து நொதிக்கவிட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை ஒன்றாக கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக்கி ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும்.
இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும் குறைவு. அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்) ஆகியவற்றையும் கலந்து ஒரு நாள் இரவு நொதிக்க விட வேண்டும்.

இந்த கரைசல் தோசை மாவு பதத்திற்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு கலந்து சிலமணி நேரம் வைத்திருந்தால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு புட்டு பதத்திற்கு மாறி விடும். இதை ஒரு ஏக்கர் நெல்வயலில் பரவலாக தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி விடும்.

இந்த இடுபொருளை மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல் என அழைக்கிறார்கள். இதற்கு பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம் பக்கத்தில் கிடைக்கக்கூடிய இலை தழைகளைக் கொண்டே கூட இடுபொருள் தயாரித்து இலைவழி தெளிப்பாகவும் ஊட்டச்சத்து கொடுக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.

இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன் நொச்சி, நெய்வேலி காட்டாமணக்கு, ஆடாதோடை இலைகளை ஒன்றாகக் கலந்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு ஆறவைத்து வடிகட்டி 3 லிட்டர் பசுமாட்டு சிறுநீர் கலக்க வேண்டும். இக்கரைசலில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து 26 லிட்டர் தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.

இந்த தொழில்நுட்பங்கள் அனைத்தும் யூரியாவைக் காட்டிலும் தழைச்சத்தும், இதர சத்துக்களும் அதிகமாகவே கொடுக்கக் கூடிய செலவு குறைந்த இயற்கையான நுட்பங்களே. இதை விவசாயி அனுபவத்திலிருந்து உணர்ந்து சொல்கிறார்.

Comments

Popular Posts