நிலைக்கொள் வேளாண்மை


கடையநல்லூரில் வசிக்கும்  திரு. ஃபெலிக்ஸ் அவர்களை பற்றி என் இனிய நண்பர் பண்ணையார் அவர்கள் நிறையவே சொல்லி உள்ளார் . நானும் அவரது முகநூல் பக்கத்தையும் அவரது கட்டுரைகளையும் படித்துள்ளேன் . சில நாட்கள் முன்னர்  பண்பொழி என்னும் ஊர் சென்ற போது நகர பேருந்தில் கடையநல்லூர் ஊர் பெயரை குறிப்பிட்டு இருப்பதை  பார்த்த பின்னர் தான் நான் அவரது ஊருக்கு அருகாமையில் இருப்பதை  தெரிந்துகொண்டேன் . சில காரணங்களால் அவரை சந்திக்க இயலவில்லை . முகநூல்நண்பர்கள்  அவரை சந்தித்து ஒரு சின்ன பேட்டி  எடுத்துள்ளனர் . இதோ தொடர்ந்து படியுங்கள் . கட்டுரையாளர் திரு. மு. நியாஸ் அகமது  அவர்களுக்கு என் நன்றிகள்.






கட்டுரையாளர் :- மு. நியாஸ் அகமது. nomadniya@gmail.com

நுகர்வை குறை... மகிழ்வை கூட்டு...

வாழ்தல் மிக சுலபமானது; பிழைத்தல் சிக்கலானது.
வாழ்தல் இனிமை; பிழைத்தல் துன்பம்.
வாழ்தல் தெய்வ நிலை; பிழைத்தல் இழி நிலை.

நாம் அனைவரும் கடவுளின் துண்டென்றால் (Piece of God), இப்புவியில் வாழவே வந்தோம், பிழைக்க அல்ல. ஆனால், பல்லாயிரம் நூற்றாண்டுகள் தொடர்ச்சியில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக கடவுளின் தன்மையை இழந்து, வாழ்தல் நிலையிலிருந்து தகுதி இழந்து, பிழைத்தல் நிலைக்கு வந்துள்ளோம்.
சரி நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.
நான் மத போதகன் அல்ல. இந்த கட்டுரை, கடவுள் குறித்த பிரச்சாரமோ, சுவிசேஷமோ அல்ல...
நான் கண்ட, வாழ்ந்த ஒரு நான்கு மணி நேர அனுபவத்தின் ஒரு பகிர்வு.
வாரத்தின் ஐந்து நாட்களின் அயர்ச்சிக்கு மருந்து தடவ காத்திருக்கும் சனிக்கிழமை பொழுது, பல ஆண்டு கால தேடலுக்கு தீர்வை தன்னுள்ளே ஒழித்து வைத்திருக்கும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
வெள்ளிக்கிழமை பின்னிரவில், நான், பாலா, தண்டபாணி, உமாசங்கர், மீனாட்சி அக்கா, சுரேஷ், கணேஷ் ஏழு பேருடன் திருநெல்வேலி கடையத்தை நோக்கிய பயணம், குற்றாலத்தில் ஒரு சின்ன இளைபாறுதலுக்கு பின்பு, எங்கள் இலக்கை அடைந்தது.
ஒரு பண்ணை தான், அது வாழ்வில் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என ஒரு போதும் நினைக்கவில்லை.
ஃபெலிக்ஸ் (Felix). மனிதர்களின் பொது புத்தி சவுகரியங்கள் என சொல்லும் அனைத்தையும் விட்டு, ஒரு துண்டு நிலத்தில் தன் ஆன்மாவை மீட்டவன்.
ஃபெலிக்ஸ் குறித்த சின்ன அறிமுகத்துடன் இக்கட்டுரையை தொடங்குகிறேன். மென்பொறியாளர், உலகின் நவீனங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புனாவில் இலகரங்களில் சம்பாரித்தவர். ஒரு நன்னாளில் அனைத்தையும் விட்டு விட்டு, தன் சொந்த ஊருக்கு இரயிலேறியவர். தன் பூர்வீக நிலமான 10 ஏக்கரில் விவசாயம் செய்ய தொடங்கி சில ஏமாற்றங்களுக்கு பின் அதை விட்டுவிட்டு வந்து வெற்றிகராமாக ஒரு 35 சென்ட் நிலத்தில் வேளாண்மை (Permaculture) செய்து கொண்டிருப்பவர்.
அவருடனான ஒரு உரையாடல் ஒரு சுகானுபவன். இயற்கை குறித்த பெரும் நம்பிக்கையும், வாழ்வு குறித்த பெரும் காதலையும் அவரின் செயல்பாடும், உரையாடலும் ஒருசேர உருவாக்கிவிடுகிறது.
அவரின் உரையாடலுக்குள் நுழைவதற்கு முன்பு, அவரின் 35 சென்ட் பண்ணை குறித்த சில தகவல்கள்.
ஃபெலிக்ஸ், தன் வீட்டுடன் ஒட்டிய ஒரு 35 சென்ட் நிலத்தில், ஆடு , மீன்  கோழி மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மூலிகைகள், காய்கறிகள் என வளர்ப்பவர். குறிப்பாக நிலைக்கொள் (permaculture),  வேளாண்மை முறையை பின்பற்றுபவர். வீட்டிற்கு தேவையான அரிசி மற்றும் எண்ணெய் வித்துகள் தவிர ஏதும் வெளியிலிருந்து வாங்காதவர்.
அவர் பண்ணையை குறித்து நான் எவ்வளவு எழுதினாலும் அதன் முழு அர்த்ததையும் வார்த்தைகளால் தர இயலாது. வேளாண்மை, மரபு வாழ்வியல் குறித்து விருப்பம் உள்ளவர்கள் ஒரு முறையேனும் அவர் பண்ணையை பார்வையிடுங்கள்.
இனி, அவருடனான உரையாடலில் இருந்து.
கேள்வி: மென்பொருள் துறையில் ஒரு பெரும் நகரத்தில் மாதம் இலகரங்களில் சம்பாரித்துவிட்டு, பெரும் வருவாய் எதிர்பார்க்க முடியாத வேளாண்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
பெரும் நகர வாழ்கை தந்த மன அழுத்தம் முதல் காரணம், அடுத்தது நான் பணியாற்றிய நிறுவனம் ஒரு முக்கிய காரணம். நான் வேலை பார்த்த நிறுவனம் எனக்கு சுதந்திரத்தை வலியுறுத்தியது பிறகு மிகுந்த தன்நம்பிக்கையை ஊட்டியது.
கே: வியப்பாக இருக்கிறது. மிகுந்த வேலை நெருக்கடியை தரும் மென்பொருள் துறை தங்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டியது என்பதை எப்படி பொருள் கொள்வது. தங்களுக்கு அளித்த அதிகமான ஊதியம் வேண்டுமானால் உங்களுக்கு அவ்வுணர்வை ஊட்டி இருக்கலாம் அள்ளவா...?
இல்லை. நிச்சயம் இல்லை. பணம் ஒரு பொருட்டல்ல... நான் வேலை பார்த்தது லினக்ஸ் திறவூற்று மென்பொருளில் (open source), அதாவது லினக்ஸ் இயங்கு முறை விண்டோஸ் போன்றதல்ல. உங்களுக்கு ஏற்றவாறு, உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் நீங்களே வடிவமைத்து கொள்ளலாம். நீங்கள் உங்களுக்கு மென்பொருள் வழங்கிய நிறுவனத்தை எதற்காகவும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை. அதாவது உங்கள் முழு கற்பனை மற்றும் தேவக்கேற்றவாறு உங்கள் இயங்கு முறை (Operating System) மென்பொருளை வடிவமைக்கும் சுதந்திரம். இது தான் எனக்கு தூண்டுதலாக இருந்தது. பிறகு, நான் நகர வாழ்வு அழுத்தத்தில் இருந்து விடுபட புகைப்பட பயிற்சி எடுத்தேன், ஆனால், அது தற்காலிக அமைதியை தான் தந்தது.
கே: புரிந்து கொள்ள முடிகிறது. சுதந்திரமாக செயல்படுதல் தான் உங்கள் எண்ணம் என்றால், வேறு ஏதாவது தொழில் செய்த்ருக்கலாமே... விவசாயத்தை தேர்ந்தெடுக்க காரணம்...?
தொடர் வாசிப்பு மட்டுமே காரணம். வேளாண்மை குறித்த தொடர் வாசிப்பு என்னை வேளாண்மை நோக்கி இழுத்தது. அதுவே என்னை விவசாயி ஆக உருமாற்றியது. மேலும், பணம் எனக்கு நோக்கமல்ல. பணமும், பிழைத்தலும் நோக்கமென்றால் நான் புனேவிலேயே இருந்திருக்கலாம். எனக்கு விடுதலை தேவைப்பட்டது. நிலத்தில் மட்டுமே சுந்திரமாக இருக்க முடியும் என்று நம்பினேன். அதுவே நான் வேளாண்மையை தேர்ந்தெடுக்க காரணம்.
கே: இலகரங்களில் சம்பாரித்துவிட்டு விவசாயம் செய்ய ஊருக்கு வந்ததும், உங்கள் மனைவி, மற்றும் உறவினர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்...?
எங்களது காதல் திருமணம். பல எதிர்ப்புகள் தாண்டி தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்தோம். திருமணமான முதல் ஒன்றரை வருடம் எனக்கு வேலை இல்லை. என மனைவியின் ஊதியம் மட்டுமே எங்கள் குடும்பத்திற்கான வாழ்வாதாரம். நான் கிட்டதட்ட 'House Husband' ஆக மட்டுமே இருந்தேன். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் உண்டு. என் மனைவி நான் எடுத்த இந்த முடிவையும் புரிந்து கொண்டார். ஆனால், என் அப்பாவை சமாதானப்படுத்துவது தான் பெரும்பாடாக ஆகிவிட்டது. அவரும் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டார். எங்கள் பூர்வீக நிலத்தில் என்னை விவசாயம் செய்ய அனுமதித்தார். ஆனால் அதுவும் சில மாதங்களில் முறிந்தது. நான் அங்கக (organic) வேளாண்மை செய்வதை அவரால் புரிந்து கொள்ள முடியாததும் ஒரு காரணம். பிறகு ஊரார். நான் வேலையை உதறிவிட்டு வந்து விவசாயம் செய்வதை ஏதோ பெரும்பாவமாக கருதி, என் தந்தையிடம் துக்கம் விசாரிக்க தொடங்கினர். அதுவும் என் தந்தை என்னை நிலத்திலிருந்து வெளியேற்ற காரணம். நிலத்திலிந்து வெளியேற்றப்பட்டால் நான் வேறு ஏதாவது தொழிற் செய்வேன் என்பது அவர் எண்ணம். ஆனால், ஒரு சின்ன நிலத்தில் விவசாயம் செய்வேன் என்பதை அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். என் முயற்சிகள் அனைத்துக்கும் துணையாக இருந்தது சட்டையில்லா சாமியப்பன் அய்யா தான்.
கே: ஆங். சாமியப்பன் அய்யாவுடன் இணைந்தது எப்படி?
இதற்கான பதில் மிகவும் சிறியது. வேளாண்மை, இயற்கை மீதான பெருங்காதல் மட்டும் தான் எங்களை இணைத்தது.
கே: ஹூம். புரிந்து கொள்ள முடிகிறது. 35 செண்ட்ல் வேளாண்மை செய்ய முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு எப்படி வந்தது?
இது ஒன்றும் புது சிந்தனை அல்ல. இதற்கு முன்பே இதை பலர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, தபோல்கர் கால்காணி 33 செண்ட் நிலத்தில் பல வேளாண் அற்புதங்களை நிகழ்த்தியவர். 33 செண்ட் நிலத்திலிருந்து வரும் வருவாயை கொண்டே ஒரு குடும்பம் ஆனந்தமாக வாழலாம் என்று காட்டியவர்.
கே: உண்மையில் உங்கள் 35 செண்ட் நிலத்தில் வருவாய் உங்களுக்கு போதுமானதாக இருக்கிறதா...?
உண்மையை சொல்ல வேண்டுமானால் தற்போது இல்லை. 60 சதவீத தேவையை மட்டும் தான் தற்போது நிலம் பூர்த்தி செய்கிறது மிச்சம் 40 சதவீததிற்கு நான் வெளி சந்தை மற்றும் வேறு செயற்பாடுகளை நம்பி இருக்கிறேன். ஆனால், கூடிய விரைவில் என் 100 சதவீத தேவையையும் என் நிலம் பூர்த்தி செய்யும் என நம்பிக்கை இருக்கிறது. அதை நோக்கியே என் பயணமும் இருக்கிறது.
கே: உண்மையில் 60 சதவீத கணக்கை மிகையாக இருக்கிறதே. உங்கள் குழந்தை நாவினி தேவைகளுக்கு....?
இதில் மிகைப்படுத்த ஒன்றும் இல்லை. மிகைப்படுத்தி கூறுவது பெருநிறுவனங்களின் வியாபார தந்திரம். எனக்கு அது தேவை இல்லை. நாங்கள் தேவைக்கு அதிகமாக நுகர்வது (consume) இல்லை. உங்கள் நுகர்வை குறைத்துக்கொண்டாலே உங்கள் வாழ்வு அற்புதமாக மாறும். நீங்கள் நுகர்வை குறைத்துக்கொள்ளும் போது இப்புவி உங்களுடம் சேர்ந்து மகிழ்வடைக்கிறது ஏனெனில் உங்கள் நுகர்வு குறையும் போது இயற்கையை அழித்தல், மாசுபடுத்துதல் குறைகிறது. குறிப்பாக என் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. அதனால் அதிகம் நுகர வேண்டும் என்ற தூண்டுதல் இல்லை. மேலும், நான் மருத்துவமனையை எட்டிப்பார்த்தே இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிறது. நான் மட்டுமல்ல என் மொத்த குடும்பமும். குறிப்பாக நாவினியும். வீட்டில் நூற்றுக்கு மேற்பட்ட மூலிகைகள் இருக்கிறது. சளி வந்தால் சிறியாநங்கை, குப்பைமேனி, துளசி சாப்பிட வேண்டும் என்பது இரண்டாம் வகுப்பு படிக்கும் என் குழந்தை நாவினிக்கு தெரிகிறது.
கே: இது எப்படி சாத்தியமானது?
மிகவும் சுலபம். வேளாண்மை குறிப்பாக permaculture என்பது பிழைத்தல் முறையல்ல வாழ்கை முறை. அதில் அனைத்துமே அடங்கும்.
கே: நம் கல்வி முறை இதற்கு எதிராக தானே இருக்கிறது?
ஆம். பெரிய பிரச்சனையே அது தான். இயற்கை சார்ந்த வாழ்கை முறையை நம் கல்வி முறை சிதைத்துவிடுகிறது. நுகர்தல் மட்டுமே இன்பம் என போதிக்கிறது. ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு நாவினியின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறேன். சான்றிதழ் தான் தேவையாக இருக்கும் போது அதற்கு privateஆக தேர்வு எழுதி கொள்ளலாமே...
கே: ஒன்றை மட்டும் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. உங்களை போன்றவர்கள் பெரும் பணம் சம்பாரித்துவிட்டு, அங்கக வேளாண்மை, நிலைக்கொள் வேளாண்மை என திரும்புவது சாத்தியம். ஆனால், ஏற்கெனவே கடனில் உழன்று கொண்டிருக்கும் விவசாயிக்கு இது எப்படி சாத்தியம்?
நான் ஏற்கெனவே கூறியது போல். பணம் ஒரு பொருட்டல்ல... உங்களுக்குள் ஒரு தூண்டுதல் வேண்டும். என்னிடம் இந்த 35 செண்ட் நிலமும் இல்லையென்றால் நான் அங்கக வேளாண்மை செய்யும் இன்னொருவர் நிலத்தில் தன்னார்வளராக (volunteer) ஆக சேர்ந்திருப்பேன். அதாவது விவசாய கூலியாக அல்ல, நான் உழைப்பு தருகிறேன் எனக்கன தேவைஅயை நீக்கள் தாருங்கள் அது உணவு, உறைவிடம் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.ஆங். அதாவது பண்ட மாற்று முறை. மேலும், நாம் வேண்டுமானால் பிழை செய்யலாம் நிச்சயம் நிலம் செய்யாது.
பேச்சின் நடுவே சட்டையில்லா சாமியப்பன் இணைந்து கொள்கிறார்.
சாமியப்பன்: தம்பி... இயற்கை விவசாயம் என்பது தொழிற் அல்ல. அது வாழ்கை முறை. ஒரு உதாரணம் சொல்கிறேன், ஈரோட்டில் ஒரு நண்பர் வெங்காயம் சாகுபடி செய்கிறார், அவருடைய நண்பர் அவருக்கு இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டுகிறார். E.M (effective microorganism) திற நுண்ணுயிர் தருகிறார். இயற்கை முறையில் விவசாயம் செய்ததில் அவருக்கு நல்ல லாபம். ஏறத்தாழ 12 இலகரங்கள் வருவாய் பார்க்கிறார். அந்த பணத்தைகொண்டு பழைய மகிழுந்துவை மாற்றி அவர் தேவைக்கு அதிகமான ஒரு 12 இலகரங்கள் மதிப்பில் குறைந்த மைலேஜ் தரும் ஒரு மகிழுந்து வாங்குகிறார். இவரை எப்படி நாம் இயற்கை வேளாண்மை செய்பவராக கருத முடியும்.
இயற்கையோடு இயைந்த வாழ்வே இயற்கை வேளாண்மை.
மீண்டும் ஃபெலிக்ஸ் தொடர்கிறார்.
நாம் நம் நுகர்வை குறைத்து கொள்ளவில்லை என்றால் நாம் எந்த உன்னதமான வேலை செய்தும் பயனில்லை. எந்த மிருகமும் தேவைக்கு அதிகமாக நுகர்வதில்லை அதற்கு தன் அடுத்த சந்ததி குறித்த எண்ணம் இருக்கிறது ஆனால் ஆறாவது அறிவு இருப்பதாக பிதற்றிக் கொள்ளும் மனிதன் மட்டும் தான் எந்த பிரக்ஜையும் இல்லாமல் பெரும் வெறிக்கொண்டு அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் நுகர்கிறான்.
கே: அண்டை வீட்டார் உங்களை எப்படி பார்க்கிறார்கள்...?
அது எனக்கு பிரச்சனை அல்ல. ஆனால் அரசு எப்படி பார்க்கிறது என்பது தான் முக்கியம். எந்த அரசும் நாம் சுயசார்பாக இருப்பதை விரும்புவதில்லை. அரசுகள் பெரும் நிறுவனங்களுக்கான கங்காணிகள். நாம் நம் தேவைகளுக்கு நிறுவனங்களை சார்ந்து இருக்க வேண்டும் என அரசு விரும்புகிறது. அதற்கு முரணாக நாம் செயல்படும் போது நம்மை கண்காணிக்க தொடங்குகிறது.
வெளியில் மழை பெய்ய துவங்கிறது.
ஃபெலிக்ஸ் உங்களுடனான சந்திப்பு பெரும் மகிழ்வை தருகிறது. என்னுள் ஒரு மாற்றத்தை உணர முடிகிறது. வீட்டில் முன்பே பல பழ மரங்கள் நட்டுள்ளேன். அது என் தேவையை கருதிய சுயநலம் தான் என்றாலும், தற்போது மரங்களின் பலன் எனக்கானது மட்டுமல்லாமல், பல பறவைகள் என் வீட்டு தோட்டத்தில் வாசம் செய்வது பெரும் மகிழ்வை தருகிறது. நிச்சயம், கூடிய விரைவில் வீட்டு தோட்டம் அமைத்து என் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நானே உற்பத்தி செய்வேன் என நம்புகிறேன்.
அப்போது பெய்த மழை இயற்கை எங்கள் எண்ணத்தை ஆசிர்வதிப்பதாகவே தோன்றியது. ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுடன் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டு விடைபெற்றோம்.
மேலும், படங்களை பார்க்க www.nomadniyas.wordpress.com சொடுக்குங்கள். ஃபெலிக்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.felixculture.in
*************************

Comments

Post a Comment

Popular Posts